சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்ததலைவர் முரளி மனோகர் ஜோசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அரசாங்கம், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண உறுதியானதும் வெளிப்படையானதுமான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்று இரா. சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மகாபோதி நிலையதில் அநகாரிக தர்மபால நினைவுச்சொற்பொழிவு ஆற்றுவதற்காக முரளிமனோகர் ஜோசி கொழும்பு சென்றிருந்த போது, அவரை சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கொழும்புக்கான பயணத்தின் முடிவில் கருத்து வெளியிட்டுள்ள முரளி மனோகர் ஜோசி, எல்லாக் குடிமக்களும் சமமானவர்கள் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்றும் அதற்கு சிறிலங்காவின் வடபகுதி விதிவிலக்காக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் வடக்கிலுள்ள மக்கள் தமக்கும் சமஉரிமை உள்ளது என்று உணரத்தக்க நிலை விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், எல்லா வாக்குறுதிகளும் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment