தாங்கள் கடத்தி வைத்திருந்த
பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை கொன்று விட்டதாக தலிபான் தீவிரவாதிகள்
நேற்று அறிவித்தனர். பாகிஸ்தானில் மறைந்திருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடனை
அமெரிக்க படைகள் கண்டுபிடித்து கொன்றதைத் தொடர்ந்து, பாகிஸ்தான்
ராணுவத்துக்கு நெருக்கடி அதிகரித்தது.
தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டுமென அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்யத்
தொடங்கியது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுடன்
அந்நாட்டு உளவு நிறுவனம்(ஐ.எஸ்.ஐ) அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக
செய்திகள் வெளியாகின.
இதை தலிபான் தீவிரவாதிகளில் சிலர் மறுத்தனர். மேலும், அமைதி
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த
மாதம் 22ம் தேதியன்று ஆப்கனிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் படை அதிகாரிகள் 15 பேரை தலிபான் தீவிரவாதிகள்
கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்திருந்தனர். அவர்களை கொன்று விட்டதாக
நேற்று தீவிரவாதிகள் அறிவித்தனர்.
தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் அசானுல்லா அசான் அமெரிக்க செய்தி
நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுகையில், ‘நாங்கள் கடத்திய
15 அதிகாரிகளையும் சுட்டுக் கொன்று, உடல்களை வடக்கு வாஜிரிஸ்தானில்
போட்டிருக்கிறோம்’ என்றார். இது பற்றி, விசாரித்து வருவதாக பாகிஸ்தான்
ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வீரர்களின் குண்டு துளைத்த உடல்கள்
நிர்வாண நிலையில் வடக்கு வஜிரிஸ்தான் ஸ்பின் தல் பகுதி வயல்வெளியில்
நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டன.

No comments:
Post a Comment