இதை அறிந்ததும் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி அர்பா கரீம் ரன்தவா(16).
தனது 9 வயதிலேயே மென்பொருள் துறையில் அபாரமான அறிவுடன் திகழ்ந்ததால் உலகின் பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இளம் சாதனையாளர் விருது இவருக்கு கடந்த 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது.
தொடர்ந்து மென்பொருள் துறையில் ஈடுபாடு காட்டி வந்த அர்பாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி சிறுமிக்கு வலிப்பு நோய் வந்ததால், உடனடியாக லாகூரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
இதை அறிந்த மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ், சிகிச்சைக்கான செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அமெரிக்காவில் மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அர்பா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அம்ஜத் கரீம் கூறுகையில், என் மகள் இறந்த செய்தி கேட்டு பில்கேட்ஸ் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அர்பானின் திறனை உலகறிய செய்தவர் பில்கேட்ஸ். அவள் இப்போது மறைந்துவிட்டாலும், உலகில் உள்ளவர்களின் அன்பு அவளுக்கு கிடைத்தது. அதற்காக பில்கேட்சுக்கு நன்றி தெரிவித்து கொண்டேன் என்றார்.

No comments:
Post a Comment